அண்ணன் பராக்! பராக்! பராக்!


              கொடும் செயலுக்கு எதிரான நாள் என்று ஐ.நா அவையால் அறிவிக்கப்பட்டுள்ள ஜூன் இருபத்து ஆறாம் நாள், ஞயிற்றுக்கிழமை மாலை, சென்னை மெரினா கடற்க்கரையில், சிங்கள இனவெறி அரசால், இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு "மே - பதினேழு" இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. (பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டிருந்தாலும், இந்த நிகழ்வை நடத்தியவர்கள் மே -பதினேழு இயக்கத்தினரே). மே -பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகனிடம், நிகழ்வுக்கு சிலநாட்கள் முன் நாங்கள் பேசியபோது, நிகழ்வில் ஒரு லட்சம் பேர் கூடுவார்கள் என்று அவர் கூறினார். அப்போது அதை மிகைப்படுத்தல் என்று நாங்கள் நினைத்தாலும், நிகழ்வுக்கு வந்த கூட்டத்தை பார்த்தபின், அதுவொன்றும் அவ்வளவு மிகைப்படுத்தல் அல்ல என்று நாங்கள் விளங்கிக்கொண்டோம்.
நிகழ்வு மாலை ஐந்து மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கபட்டிருந்தாலும், மதியம் இரண்டு மணி முதலே மக்கள் கூட தொடங்கி விட்டனர். நேரம் நெருங்க நெருங்க மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கவே, தோழர்கள், மக்களை ஒழுங்கு படுத்தி ஓர் இடத்தில் உட்கார வைப்பதற்குள் பெரும் பாடு பட்டுவிட்டனர். உணர்வு வயப்பட்ட கூட்டத்தினர், தங்கள் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பத்தொடங்கினர். கடற்கரைக்கு காற்றுவாங்க வந்த மக்களில் பலரும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து விட்டனர். 

நேரம் செல்ல செல்ல, தலைவர்கள்(??) ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அரைவட்டமாக அமர்ந்திருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு மூலையில், முக்கியமான நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்குதான் தலைவர்களும்(??) அமர்ந்திருந்தனர். அப்போதுதான் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் வந்தார். நிகழ்விற்கு, பெரும் கூட்டத்தோடு(????) வந்த சீமான், நேராக தலைவர்கள்(??) அமர்ந்திருக்கும் இடத்திற்கு செல்லாமல், தான் வந்திருப்பதை எல்லோருக்கும் தெரிவிக்கவோ, என்னவோ, அமர்ந்திருந்த மக்கள் கூடத்தின் ஒருமுனையில் இருந்து ஊர்வலமாக நடக்க தொடங்கினார். 

சீமானுடன் வந்திருந்தவர்கள்(????), அண்ணனை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், கொஞ்சமும் கூச்சப்படாமல், அமர்ந்திருந்த மக்கள் மீது ஏறி நடக்க ஆரம்பித்தனர். மிதிபட்ட மக்கள், அவர்களை திட்டக்கூட முடியாமல் அமர்ந்திருக்க, அந்த கூட்டம் வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்த இடத்தை அடைந்தது. "ஹே! அண்ணனை தொடாதே!, ஹே! அண்ணனுக்கு வழிவிடு!" என்று கூட்டத்தினரை மிரட்டிக்கொண்டும், மிதித்துக்கொண்டும் வந்தவர்கள், பெண் வழக்கறிஞர் ஒருவரின் காலை மிதித்து விட்டனர். இதை எதிர்த்து கேள்வி கேட்ட அந்த பெண்ணை, "உனக்கு பாதுகாப்பா இருக்கணும் என்று நினைத்தால் ஏன் இங்கு வந்தாய்? பெண்ணாய் அடக்கமாய் வீட்டில் இருந்திருக்க வேண்டியதுதானே" என்று ஏளனமாய் பேசி உள்ளனர் சீமானின் சிஷ்யன்கள்(????). வெகுண்டெழுந்த நம் பெண் வழக்கறிஞர், "பெண் விடுதலையை வாய்கிழிய பேசும் உங்கள் அமைப்பில் பெண்களை இப்படிதான் நடத்துவீர்களா? நீங்கள் எல்லாம் தோழர்களா? நீங்கள் அணிந்திருக்கும் பெரியார் டி-ஷர்ட்டை அவிழ்த்து எறியுன்கடா" என்று திட்டி தீர்த்துள்ளார். 

இதன்பிறகும் கொஞ்சமும் கலக்கமடையாத அந்த கூட்டம், தலைவர்கள்(??) இருந்த பகுதிக்குள் அதே வேகத்துடன் நுழைந்தது. முன்னே நின்றவர்களை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவர்கள், பின்னே இருந்தவர்களை தள்ளிவிட, அவர்களில் ஒருவர், தலைவர்(??) ஒருவரின் மீது போய் விழுந்தார். இதைக்கண்டு வெகுண்டெழுந்த மற்றொரு தலைவர்(??), சீமானை பார்த்து "சீமான், உன் ஆட்களை ஒழுங்கு படுத்து" என்று கோபமாக கூறினார். அதை பெரிதும் பொருட்படுத்தாத சீமான், பெயருக்காக தன் கூட்டத்தை(????) ஒருமுறை திரும்பி பார்த்து பின்னர் அமர்ந்து கொண்டார். 

"ஹே! அண்ணனை தொடாதே!, ஹே! அண்ணனுக்கு வழிவிடு!" என்ற சப்தம் சீமான், நிகழ்விலிருந்து கிளம்பும் வரை கேட்டுக்கொண்டே இருந்தது. அதன் பிறகு, யார் எல்லாம் மிதிபட்டார்கள் என்பதை கவனிக்கும் முன், இருள் சூழ தொடங்கி விட்டது. மெழுகுவர்த்தியை ஏந்திய மக்கள், நிகழ்வின் இறுதியில் நிகழ்த்தப்பட்ட நாடகத்தை கண்டு கழித்துவிட்டு நகர தொடங்கினர். 

விழா அமைப்பு தோழர்கள், மக்கள் விட்டெறிந்து சென்ற குப்பைகளை மிகவும் பொறுப்புடன் அப்புற படுத்திக்கொண்டு இருந்தனர்.
_________

???? = அள்ளக்கை. 
?? = எனப்படுபவர்கள்.
__________

அசீப்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்:


2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்:


  • ஸ்பெக்ட்ரம் (அலைக்கற்றை) என்றால் என்ன?
ஸ்பெக்ட்ரம் என்றால் வேவ்ஸ் என்று சொல்லப்படும் மின் காந்த அலைகள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திலிருக்கும் ஒருவருக்கு தொடர்பு கொண்டு பேச உதவும் கம்பியில்லா அலைகள்.ரேடியோ, டிவி, செயற்கைக்கோள் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான ஸ்பெக்ட்ரம் பிரீகுவென்சி ஒதுக்கப்படும்.

  • 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?
ஜி என்பது ஜெனரேஷன் - தலைமுறை என்பதைக் குறிக்கும். 1 ஜி என்பது முதல் தலைமுறை. லேண்ட்லைன் டெலிபோன், வாக்கி டாக்கி உள்ளிட்டவை முதல் தலைமுறை ஸ்பெக்ட்ரத்தில் அடங்கும். இரண்டாம் தலைமுறையின் கீழ் செல்போன் வரும். 3 ஜி - மூன்றாம் தலைமுறை செல்போனிலேயே முகம் பார்த்துப் பேசுவது.

  • யார் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்குவது?
இந்திய அரசாங்கம் ஸ்பெக்ட்ரத்தை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும். மத்திய தொலைத்தொடர்புத் துறை மூலமும், ட்ராய் என்றழைக்கப்படும் டெலிகாம் ரெகுலாரிட்டி ஆத்தாரிட்டி ஆப் இந்தியா (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) மூலம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யும்.
  • ஊழல் எவ்வாறு நடந்தது?
'முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற விதியை ட்ராய் வகுத்தது. அதன் அர்த்தம் எந்த நிறுவனம் முதலில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கு விண்ணப்பம் செய்கிறதோ அதிலிருந்தே கணக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும். ஆனால் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரான ராசாவோ தனக்கு வேண்டப்பட்ட, கொல்லைப்புறமாக பணம் கொடுத்த நிறுவனங்களுக்கு முன்பே ரகசியமாக தெரிவித்துவிட்டு, வேண்டப்படாத நிறுவனங்களுக்கு சொல்லாமல் திடீரென்று ஒரு தேதியை குறிப்பிட்டு, அத்தேதியில் குறிப்பிட்ட 45 நிமிடத்திற்குள் கோடிக்கணக்கான பணத்தை வங்கிகளிலிருந்து டிடியாக எடுத்து வரவேண்டுமென்றும் உத்தரவிட்டார். முன்பே சொல்லாமலிருந்தால் எவ்வாறு 45 நிமிடத்திற்குள் கோடிக்கணக்கான ரூபாயை வங்கியிலிருந்து எடுக்கமுடியும்? அவ்வாறு பணம் கட்டிய ஸ்வான் டெலிகாம், யூனிடெக் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டன. இதில் ஸ்வான் டெலிகாம் ஸ்பெக்ட்ரத்தைப் பெற்று அதை துபாயைச் சேர்ந்த எடிசலாட் என்ற நிறுவனத்திற்கு விற்றது. அந்த எடிசலாட் நிறுவனம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்புள்ள நிறுவனமென்றும், அதன் இயக்குனர் ஷாஹித் பால்வா, மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி என்றும் கூறப்படுகிறது. யூனிடெக் என்பது ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் (தினத்தந்தி நாழிதளில் அடிக்கடி முதல் பக்கத்தில் விளம்பரம் வரும்). யூனிடெக் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி, பலமடங்கு லாபாம் பார்த்து நார்வேயைச்சேர்ந்த டெலினார் என்ற நிறுவனத்திற்கு விற்றது. (யூனிடெக் மற்றும் டெலினார் இரண்டு பெயரையும் சேர்த்து யூனினார் என்று நிறுவனத்தை துவக்கினார்கள்). மேலும் டாடா நிறுவனமும் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி ஜப்பான் நாட்டு நிறுவனமான டொகோமொவிடம் பன்மடங்கு லாபம் வைத்து விற்றுவிட்டது.
மேலும் முக்கியமானது விலை. 2001ல் சர்க்கரை விலை 12 ரூபாயாக இருந்திருக்கும். அதே 2008ல் 16 ரூபாயாக உயர்ந்திருக்கும். ஆனால் 2001 ஆம் ஆண்டின் விலையிலேயே 2008 ஆம் ஆண்டிலும் விற்றால் 4 ரூபாய் நஷ்டம் ஏற்படும். அதே கதைதான் ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடந்தது. 2001 ஆம் ஆண்டின் விலையிலேயே 2008 ஆம் ஆண்டும் ஸ்பெக்ட்ரத்தை ராசா விற்றார். இதனால் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆறாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதென்று இந்திய கணக்குத தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் விற்றதால் ராசா கொல்லைப்புறமாக 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பெற்று, அதை தன்னை வளர்த்த கட்சிக்கும், தனது தலைவருக்கும், நெருங்கியவர்களுக்கும் (கனிமொழி) பங்கிட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புள்ள எடிசலாட் நிறுவனத்திற்கும், சீனா ராணுவத்துடன் தொடர்புள்ள டெலினார் நிறுவனத்திற்கும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கக்கூடாது என நிதி அமைச்சகம் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அப்போது நிதி அமைச்சராகயிருந்த ப.சிதம்பரம் அவ்விதியைத் தளர்த்தி ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவங்கள் மூலம் ராசாவுடன் சேர்ந்துகொண்டு ஸ்பெக்ட்ரம் வழங்க உதவியதாகவும், ராசாவின் நடவடிக்கை அனைத்திற்கும் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பிருப்பதாகவும், அடுத்தடுத்த குற்றப்பதிரிகையில் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் பெயரும் இடம்பெறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
ராசாவுக்கு முன்பு அப்பதவியிலிருந்த தயாநிதி மாறனிடம் ஏர்செல் நிறுவனத்தைத் துவங்கிய சிவசங்கரன் ஸ்பெக்ட்ரம் வேண்டி விண்ணப்பம் செய்தார். ஆனால் ஸ்பெக்ட்ரம் வழங்க மறுத்த மாறன், மலேசியாவைச் சேர்ந்த  இலங்கைத் தமிழர் அனந்தகிருஷ்ணன் என்பவருக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்கச்சொல்லி மிரட்டினார். மிரட்டல் தாங்க முடியாமல் சிவசங்கரனும் ர்செல்லை விற்றுவிட்டார். அடுத்த சில மாதங்களில் ர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டது. இது ஏனெனில், ர்செல்லை வாங்கியவர் நடத்திவரும் மேக்சிஸ் நிறுவனம், தயாநிதி மாறனின் சகோதரராகிய கலாநிதி மாறனுடைய சன் டி.டி.ஹெச்.ல் முதலீடு செய்துள்ளது. அதன் காரணமாகவே தயாநிதி மாறன் அவ்வாறு செய்தார் என கூறப்படுகிறது. அதன் மூலம் தயாநிதி மாறன் 625 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் சிவசங்கரன். ஜூன் 30 ஆம் தேதி தாக்கலாகவுள்ள 3 வது குற்றப்பத்திரிக்கையில் தயாநிதி மாறன் பெயர் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. 

  • கனிமொழி சிக்கியது எப்படி?


தயாநிதி மாறனுடன் மோதல் ஏற்பட்டபோது, சன் டிவியிலிருந்து பங்குகளை திரும்பப்பெற்றுக்கொண்டு கலைஞர் டிவி துவக்கப்பட்டது. வெறும் 5 கோடி ரூபாய் அளவே முதலீடு கொண்ட கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கடனாக டி.பி. ரியாலிட்டி நிறுவனம் கொடுத்துள்ளது. அத்தொகையையும் வட்டி 31 கோடி ரூபாயையும் சேர்த்து திரும்பக்கொடுத்து விட்டதாக கலைஞர் கூறுகிறார். கலைஞர் டிவி துவங்கி இரண்டு வருடமே ஆகிறது, பின் எவ்வாறு இவ்வளவு பெரிய தொகையை அவர்கள் திரும்பக்கொடுத்தார்கள்?

கலைஞர் டிவிக்கு கொடுக்கப்பட்ட பணமும் நேரடியாக கொடுக்கப்படவில்லை. தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவதுபோல், ஸ்வான் டெலிகாமின் துணை நிறுவனமான டி.பி. ரியாலிட்டிகுச்சென்று, அங்கிருந்து அதன் துணை நிறுவனமான குசெகான் ப்ரூட்ஸ் அண்ட் விஜிடேபில்ஸ்  நிருவனத்திற்குச்சென்று , அங்கிருத்து அதன் துணை நிறுவனமான சினியுக் நிருவனத்திற்குச்சென்று, அங்கிருந்து கலைஞர் டிவிக்கு வந்துள்ளது. டி.பி. ரியாலிட்டி, குசெகான் ப்ரூட்ஸ் அண்ட் விஜிடேபில்ஸ், சினியுக் என அட்ரஸ் இல்லாத நிறுவனங்களைச் சுற்றி வந்ததாலும், அந்த நிறுவனங்கள் அனைத்தும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியிருப்பதாலும், 214 கோடி ரூபாய் ஊழல் பணமே என்று சி.பி.ஐ. கூறுகிறது. ஒழுங்கான பணமாக இருந்திருந்தால் நேரடியாக கொடுக்கப்பட்டிருக்கும், கருப்புப்பனமாக இருப்பதாலேயே இவ்வளவு தூரம் சுற்றி வந்துள்ளது என்றும் சி.பி.ஐ. நினைக்கிறது. இதன் காரணமாகவே 20 சதவீத கலைஞர் டிவி பங்கு வைத்திருக்கும் கனிமொழியும், அதே 20 சதவீத பங்கு வைத்திருக்கும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமாரும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வயதானவர் என்பதால் 60 சதவீதம் பங்கு வைத்திருக்கும் கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாள் பெயரைச் சேர்க்கவில்லை என சி.பி.ஐ. கூறியது. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மூன்றும் கனிமொழி, சரத் குமாரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

  • இனி என்ன நடக்கும்?


கழகத்திற்காக உழைத்த தன்னைக் காட்டிக்கொடுத்ததால் ராசாவும், 214 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடந்தபோது கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் பதவியில் இல்லாமலேயே மாட்டிய  சரத் குமாரும் அப்ரூவர் ஆக வாய்ப்புள்ளது!. அதிகபட்சமாக 11 குற்றப்பத்திரிகை தாக்கலாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதுவரையில் கனிமொழி, ராசா, சரத் குமார் ஆகியோர் ஜெயிலேயே இருக்க நேரிடும். தயாநிதி மாறன், ப.சிதம்பரம் ஆகியோரையடுத்து மேலும் சில தி.மு.க., காங்கிரஸ் தலைகளின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற வாய்ப்புள்ளது.
குற்றப்பத்திரிகை எல்லாம் நீதிமன்றத்தில் தாக்கலான பிறகு, வழக்கு விசாரணைக்கு வரும், அதன் பிறகே குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். இவ்வழக்கு முழுமையாக முடிய எப்படியும் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு மேலாகலாம் எனவும் கூறப்படுகிறது!. வழக்கு முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 7 வருடம் சிறை தண்டனை கிடைக்கக்கூடும். ஆக வாழ்நாளின் பெரும்பகுதி ராசா, கனிமொழி, சரத் குமார், ஷாஹித் பால்வா உள்ளிட்டவர்கள் சிறையிலேயே கழிக்க நேரிடும்!.


'ஊழல் செய்பவர்கள் இவ்வழக்கைக் கண்டாவது பயந்து படிப்பினைப் பெறவேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும்!'.


- உமர் முக்தார் 

ஏன் வேண்டும் ஈழம் ?

ஏன் வேண்டும் ஈழம் ?

  • இலங்கை விடுதலை அடைந்தபோது தமிழர்களின் எண்ணிக்கை : 35,00,000.
  • சிங்களர்களின் எண்ணிக்கை : ஒன்றரை கோடி.
  • தற்போது தமிழர்களின் எண்ணிக்கை : 35,00,000.
  • சிங்களர்களின் எண்ணிக்கை : இரண்டரை கோடி. 
  • முப்பது வருட அகிம்சை வழி போராட்டம்.
  • முப்பது வருட ஆயுத போராட்டம்.
  • இரண்டு தலைமுறைகளை தாண்டி நடந்துவரும் உரிமைக்கான போர்.
  • ஆசியாவிலேயே, நெடுங்காலமாக நடந்துவரும் ஒரே போராட்டம்.
  • இதுவரை கொள்ளப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை: 3,00,000.
  • சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் தமிழர்களின் எண்ணிக்கை: 50,000 - 1,00,000.
  • இறுதி யுத்தத்தில், மூன்றே நாட்களில் கொள்ளப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை: 30,000.
  • உயிர் பலிகளுக்கு வேண்டும் நியாயம். 
  • ஒடுக்குமுறைக்கு எதிராக, வேண்டும் நீதி.
  • வாழ்வதற்க்கு வேண்டும் நாடு. 
  • ஒரே லட்சியம்: ஈழம் 
  • அடைவதற்கான வழி: போராட்டம்.
  • எனவே, 
                       ...........தொடரும் இந்த போராட்டம்.

தமிழர்களே!

        நாம் இழந்துவரும், சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க, போராட்டத்தை கட்டியமைப்போம்!
        உண்மையான சுயநிர்ணய உரிமை என்னவென்பதை ஒவ்வொரு தமிழ்நாட்டு, தமிழனுக்கும் உணர்த்துவோம்!
        உலகம் முழுவதும், உரிமைக்காக நடத்தப்படும் போராட்டங்களை, தீவிரவாதம் என்ற பெயரில் ஒடுக்கிவரும் ஏகாதிபத்தியத்தை எதிர்போம்!
        இதுவே உண்மையான விடுதலைக்கு வழி!

     



நினைவேந்தல்
















மதுப் பழக்கம்



மதுப் பழக்கம் - அதிகரிக்கும் விழுக்காடு 

                தமிழகத்தில் தெருக்கு தெரு திறந்துள்ள மதுக்கடைகளால், படித்த இளைஞர்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்துள்ளது. போதைக்கு அடிமையாகும் இவர்களுக்கு அளிக்கப்படும் கொடுமையான சிகிச்சைகளால், உயிரிழப்பும் நேரிடுகிறது. முழு மது விலக்கு மூலம்  மட்டுமே, மதுவால் சீரழியும் தமிழகத்தை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற முடியும்.

                 விடிந்ததும் அரசு மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்! மதுவை அருந்தி விட்டு சுயநினைவு இழந்து சாலை ஓரங்களில் வீழ்ந்து கிடக்கும் கூலித் தொழிலாளிகள் !! மாநிலத்தில் ஆறாக ஓடும் மது கலாச்சாரத்தால்,  படித்த இளைஞர்கள் இடையே, அதிகரித்து வரும் மதுப்பழக்கம்.

             

 இப்படி தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில்,  ஆண்டுக்கு 2 ஆயிரம் இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொது இடங்களில் மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக விதிகள் இருந்தாலும், அவை காற்றில் பறக்க விடப்படுவதால், பெண்கள் படும் வேதனைகளுக்கு அளவே இல்லை.  சமிபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
             
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு சில தனியார் நடுவங்கள்  சிகிச்சை அளிக்கின்றன. ஆனால், சிகிச்சை என்ற பெயரில் போதைக்கு அடிமையானவர்கள் இங்கு கடுமை தாக்கப்படுகின்றனர். இதனால் சிலர் உயிரிழக்கும் ஆபத்தும் ஏற்படுகிறது. மேலும், பல ஆண்டுகள் மதுப்பழக்கம் வீட்டின் அமைதியை சீர்குலைத்து விடுகிறது.


சென்னை கின்டியைச் சேர்ந்தவர் முகமதுரபிஃக். இவர் நீன்ட நாட்களாக மதுவிற்கு அடிமையாகி தன் வாழ்வை தொலைத்துவிட்ட நிலையில் உயிரையும் பறிகொடுக்கும் அபாயத்தில் இருந்தார். மதுப்பழக்கத்தால் இவர்  மட்டுமின்றி மனைவி மற்றும் குழந்தைகளும் பெரும் அவதிப்பட்டுவந்தனர். குடும்பம் படும் கஷ்டத்தைப் பார்த்து மது பழக்கத்தை நிறுத்திவிடலாம் என பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை. இந்நிலையில் நண்பர் ஒருவர் மூலம் மறுவாழ்வு மையம் பற்றி அறிந்து அங்கு சென்று போதைப்பழக்கத்தில் இருந்து விடுபட சிகிச்சை மேற்கொள்ள முடிவுசெய்து அந்த மையத்தில் இனைந்தார்.

அங்கு சிகிச்சை என்ற பெயரில் மனிதர்களை மாட்டையடிப்பது போல் அடிப்பது, இருட்டு அறையில் அடைத்து வைப்பது, உணவில்லாமல் பட்டினி போடுவது என முற்றிலும் மனித உரிமைகளுக்க எதிரான முறையில் நோயாளிகள் நடத்தப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட சிகிச்சையை தாங்கமுடியாத முகமது ரபிஃக் ஒரு வாரத்தில் பரிதாபமாக உயிரிலந்தார். 

மனம் திருந்தி மறுவாழ்வு வாழ நினைத்து சிகிச்சைக்கு சென்றவர் மரணித்து பிணமாக வீடு திரும்பினார். அவரின் மனைவியும் குழந்தைகளும் இப்போது நடுத்தெருவில் நிற்கின்றனர்.



தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக நலனில் அக்கறையுள்ள பலர், தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதனை ஏனோ அரசு காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. வருவாயை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல் தமிழகத்தின் எதிர்காலமான, இளைஞர்களின் வாழ்வை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டும். இதன்மூலம் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.

                                                                         மக்கள்  ஆனந்த் குமார் 






காதில் கேட்டவை: 'THE WAR YOU DON'T SEE'

காதில் கேட்டவை: 'THE WAR YOU DON'T SEE'

The_War_You_Dont_See_poster.jpg

ஆஸ்திரேலியாவில் பிறந்து, லண்டனில் வசிக்கும் செய்தியாளர் "ஜான் பிள்கேர்".

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் நடத்தும் தாக்குதலில் கொல்லப்படும் அப்பாவி பொதுமக்கள் பற்றிய செய்திகளை, ஊடகங்கள் எவ்வாறு மறைக்கின்றன என்பது குறித்து ஜான் பிள்கேர் தயாரித்துள்ள ஆவணப்படம் 'THE WAR YOU DON'T SEE' இந்தப்படம் சமீபத்தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ் நகரில் திரை இடப்படுவதாக இருந்தது. ஆனால், (அரசு கொடுத்த) நெருக்குதலின் காரணமாக இப்படத்தை, விழா அமைப்பாளர்கள் கடைசி நேரத்தில் திரையிட மறுத்துள்ளனர்.

ஓரளவிற்க்கு ஜனநாயகம் இருப்பதாக நம்பப்படும் அமெரிக்காவிலேயே, செய்தியாளர்களுக்கு இந்த நிலைமை என்றால், இந்தியாவில் செய்தியாளர்கள் நிலைமை குறித்து யோசித்து பாருங்கள்!

அப்படிஎன்றால் ஜனநாயகம் என்று ஒன்று இருப்பதாக சொல்கிறார்களே, அது யாருக்காக? அல்லது யாரிடம் உள்ளது?

இந்த ஆவணப்படம் குறித்த மேலும் தகவல்கள் கீழ்காணும் தளத்தில். 'http://www.johnpilger.com/articles/lannan-foundation-in-us-bans-pilger-film-and-cancels-visit'.

அண்ணா சாலையில் அநாமத்தாக நிற்கும் 1200 கோடி!

அண்ணா சாலையில் அநாமத்தாக நிற்கும் 1200 கோடி!

'எத்தனை நாள்தான் வாடகை கொடுத்துக்கொண்டு இருப்பது? நமக்கென்று சொந்தமாக தலைமைச் செயலகம் தேவையல்லவா? என்ற எண்ணத்தில் கட்டினாரோ? அல்லது புதிதாக தலைமைச் செயலகம் கட்டுவதன்மூலம் கொல்லைப்புறமாக பணம் ஈட்டலாம் என்ற எண்ணத்தில் கட்டினாரோ? தெரியவில்லை; ஆனால் தனது கனவுத் திட்டம் எனக்கூறி புதிய தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டினார் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி!

30 சதவீத வேலைகள் முடிவதற்குள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியா காந்தி ஆகியோரை வரவழைத்து பிப்ரவரி 13, 2010 அன்று திறப்புவிழாவையும் நடத்தி முடித்து விட்டார் கருணாநிதி!

புதிய தலைமைச் செயலகம் கட்டப்ப்படும்போதே செல்வி.ஜெயலலிதா 'தான் அடுத்து முதல்வரானால், புதிய தலைமைச் செயலகத்தில் காலடிகூட எடுத்துவைக்கமாட்டேன்' என்று சூளுரைத்தார்! அதன்படியே ஆட்சிப் பொறுப்பேற்றதும் பழைய தலைமைச் செயலகத்திலேயே பணிகளைத் தொடர்கிறார். தேர்தல் வருவதற்குள் பழைய தலைமைச் செயலகத்திலிருந்து அனைத்துத் துறைகளையும், அமைச்சர்கள் அறைகளையும் புதிய தலைமைச் செயலகத்திற்கு மாற்றிட வேண்டுமென்று நினைத்தார் கருணாநிதி. ஆனால் 9 துறைகளை மாற்றுவதற்குள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் மாற்றமுடியவில்லை.

பிறகு ஜெயலலிதா முதல்வரானதும் சட்டமன்றத்தில் "புதிய தலைமைச் செயலகம் அரசு எந்திரத்தை நடத்துவதற்கு லாயக்கற்றது என்றும், 9 துறைகள் மட்டுமே அங்கு உள்ளது, மீதி 29 துறைகள் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே உள்ளதாகவும், புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதைப்பற்றி விசாரிக்க ஒரு கமிஷன் அமைக்கப்படுமென்றும், அதற்கு ஏதுவாக தொடர்ந்து முடியாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டடப்பணி நிறுத்தப்படுவதாகவும்" தீர்மானங்கள் நிறைவேற்றினார்.

முதல்வரின் இம்முடிவிற்கு 2 காரணங்களை நாம் ஆராயவேண்டும்.
ஒன்று அதில் நிஜமாகவே நடைபெற்ற ஊழல் 
இரண்டு தன்னால் நிறைவேற்ற முடியாததை கருணாநிதி செய்துவிட்டாரே ங்கிற ஆணவம், ஈகோ.

1 ) கருணாநிதி முதல்வராக இருக்கும்பொழுது கொண்டுவந்த திட்டமான 'கலைஞர் காப்பீட்டுத் திட்ட'த்தில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற ஈ.டி.எ. குழுமத்தின் நிறுவனம் அதிக பயனடைந்தது. கல்ப் நாட்டு நிறுவனமான ஈ.டி.எ. குழுமத்தின், கட்டுமான நிறுவனம்தான் புதிய தலைமைச் செயலகத்தை கட்டியது. எனவே இதில் 400 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது தினமும் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு, டிப்ஸ் கொடுத்து பார்த்துப் பார்த்து கட்டினாலும், விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்பவர் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறா கலைஞர்!

2 ) இதற்கு முன்பு 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியிலேயே புது தலைமைச் செயலகம் கட்ட பல இடங்கள் பரிசீலிக்கப் பட்டன. தமிழகத்தின் முதல் மகளிர் கல்லூரியான ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு அங்கு தலைமைச் செயலகம் காட்டப்படும் என அப்போது ஜெயலலிதா அறிவித்தார். அதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு தி.மு.க. போராடி, அத்திட்டத்தை வாபஸ் பெற வைத்தது. அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கோரப்பட்டது. பிறகு அதுவும் முடியாமல் கோட்டூர்புரத்தில் ஒரு இடம் பார்த்து வைத்தார் ஜெயலலிதா. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. (ஜெயலலிதா கோட்டூர்புரத்தில் பார்த்துவைத்த இடத்தில்தான் கருணாநிதி 'அண்ணா நூற்றாண்டு நூலகம்' காட்டியுள்ளார் என்பது வேறு விஷயம்). எனவே தன்னால் கட்டமுடியாத புதிய தலைமைச் செயலகத்தை கருணாநிதி கட்டிவிட்டரே என்று ஜெயலலிதா ஆணவங்கொண்டு இச்செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது!.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை, புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் திரு. கிருஷ்ணமூர்த்தி என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைமைச் செயலகத்தை மாற்றியதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். வழக்கு தள்ளுபடியானதால் மேல்முறையீடு செய்யவுள்ளதாக வழக்கறிஞர் திரு. கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

புதுச்சேரி காவலரின் தொப்பிபோல் உள்ளது என்றும், தண்ணீர் டேன்க் போல் உள்ளது என்றும் கிண்டல் செய்யப்பட்ட புதிய தலைமைச் செயலகம், வியர்வை சிந்தி உழைத்த மக்களிடம் வாங்கப்பட்ட, ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் வரிப்பணத்தை, மொத்தமாக விழுங்கிக்கொண்டு, அண்ணா சாலையில் அநாமத்தாக நிற்கிறது!.

- உமர் முக்தார்

சமச்சீர் கல்வி தீர்ப்பு!


சமச்சீர் கல்வி தீர்ப்பு!
   
கடந்த தி.மு.க. ஆட்சியில் 2010-2011 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வியை அமுல்படுத்தபட்டது. மீதமுள்ள 2,3,4,5,7,8,9,10 ஆகிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த, அதன் சாதக, பாதகங்களை ஆராய கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைத்தது தி.மு.க. அரசு.
   
முத்துக்குமரன் குழு, முழுவதையும் ஆராய்ந்து 109 கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அவை அனைத்தையும் உடனடியாக அமல்படுத்த வாய்ப்பில்லாததால், வெறும் நான்கு கோரிக்கையை மட்டுமே தி.மு.க. அரசு அமல்படுத்தியது. மேலும், மீதமுள்ள வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல்படுத்தி, அதற்காக இரு நூறு கோடி செலவில் புத்தகங்களையும் அச்சிட்டது.
   
அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தல் வந்து, அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தது. கருணாநிதியாக இருந்தாலும், ஜெயலலிதாவாக இருந்தாலும் கடந்த கால ஆட்சியில் செய்தவற்றை புதிதாக பொறுப்பேற்றதும் நிறுத்திவிடுவது வழக்கம். அதுபோல்தான் தி.மு.க. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை அ.தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வி சட்டத்தில், திருத்தம் கொண்டுவந்து கலைத்தது.
   
அதற்கான காரணம், தி.மு.க. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகியவற்றைவிட தரத்தில் குறைவாக உள்ளது என்றும், வெறும் புத்தக அளவிலேயே சமச்சீராக உள்ளது என்றும் அ.தி.மு.க. அரசு கூறியது. (கலைஞரின் கவிதை இடம் பெற்றதும் ஒரு காரணம் என்பது வேறு விஷயம்). எனவே, சமச்சீர் கல்வி தரத்தை உலகளவில் உயர்த்த, மீண்டும் ஒரு நிபுணர் குழு அமைக்கப்படுமெனவும் அரசு கூறியது.
   
இதை எதிர்த்தும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரியும், "பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை" என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.பிரின்ஸ் கஜேந்திரபாபு உட்பட, ஆறுபேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அவ்வழக்கில், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்கு தடை விதித்து, சமச்சீர் கல்வி இந்த கல்வியாண்டே தொடர வேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
   
இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தங்களது கருத்தையும் இவ்வழக்கில் கேட்க்க வேண்டுமெனக் கூறி மனுதாரர்கள் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இது அவசர வழக்காக ஏற்கப்பட்டு விசாரணைக்கு வந்தது. இதில் பழையபடி ஒண்டு மற்றும் ஆறு ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வி தொடரவேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மீதி வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி தேவையா? இல்லையா? என்பது பற்றி ஆராய தமிழக அரசு நிபுணர் குழு அமைக்கவேண்டும் என்றும் அக்குழுவில், இந்திய பாடத்திட்டக் கழகத்தைச் சேர்ந்த 2 தமிழக அதிகாரிகள் உட்பட 4 பேரும், 2 கல்வியாளர்களும், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர், இயக்குனர் ஆகியோர் இடம்பெற்று இருக்கவேண்டுமெனவும், அதன் தலைவராக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நியமிக்கப்படவேண்டும் எனவும் நிபந்தனை விதித்து, 2 வாரத்திற்குள் அக்குழு தனது அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
   
தற்போது 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு சிக்கல் தீர்ந்தாலும், மீதமுள்ள வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்டமே தொடரப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2 வார காலத்திற்குள் நிபுணர் குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியதால் 15 ஆம் தேதி (புதன்கிழமை) திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வியும், திறக்கப்பட்டாலும் எந்த பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்றும் தெரியாத ஒரு புதிரான நிலை பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
   
ஏற்கனவே தி.மு.க. அரசு அச்சடித்த சமச்சீர் கல்வி பாடத்திட்ட புத்தகங்களால் 200 கோடி ருபாய் வீண் ஆனது. தற்போது, அ.தி.மு.க. அரசு அச்சடித்துள்ள பழைய பாடத்திட்ட புத்தகங்களால் பல கோடி ருபாய் வீணாக வாய்ப்புள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு கல்வியின் மீதான அக்கறையா? அல்லது கருணாநிதியின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியா? புதிய அரசு சொல்வது உண்மையாக இருந்தாலும் தேவை இல்லா பகுதியை மட்டும் நீக்கிவிட்டு மற்றவற்றை,அமல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். இந்த திட்டத்தை இக்கல்வியாண்டில் செயல்படுத்திவிட்டு படிப்படியாக மாற்றுவதே ஆரோக்கியமானது. தவறே நிகழ்ந்து இருந்தாலும் சமச்சீர் கல்வி என்பது கல்வியின் முன்னோக்கு சிந்தனையே! மீண்டும் நான்கு வழி பாடத்திட்டத்திற்கு செல்வது பிற்போக்கைத் தவிர வேறொன்றுமில்லை!
  
தரம் குறைவாக உள்ளது என்பது மாநில பாடத்திட்டம் அல்லாத மற்ற பாடதிட்டங்களோடு ஒப்பிடும்போது மட்டுமே. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் மூலம் படிப்பவர்களே அதிகம். எனவே, தமிழக அரசு சமச்சீர் கல்விபாடத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் கருத்தாக உள்ளது!

- உமர் முக்தார், செய்தியாளர், வின் தொலைக்காட்சி

June 14:
அந்த ஐந்து தோட்டாக்கள் அவருக்கு ஐந்து நட்சத்திரங்கள் ஆயின ..




 ஜோதிர்மாய் டே --- 
மும்பை மிட் டே இதழின் சிறப்பு புலனாய்வு செய்தியாளர், ஜோதிர்மை  டே. கடந்த சனிகிழமை பிற்பகல், போவாய் அருகே 2.40  மணிக்கு, அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு பேர் ,  நான்கு இரு சக்கர  வாகனங்களில் வந்து அவரை தாக்கி இருக்கிறார்கள் .

. ஐந்து குண்டுகளை உடம்பில் ஏந்தி மும்பை நகரத்து சாலையில் தன் உயிரை இழந்திருக்கிறார் டே . 

தொடர்ந்து மும்பையின் நிழல் உலகத்தை பற்றி பல கட்டுரைகள் எழுதி வந்தவர் டே . 

ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ் ,நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியுள்ளார் டே ..

எப்போதும் செல்போனுடனே காட்சியளிக்கிற டே , தன்னுடைய நிழல் உலக தொடர்புகளை எப்போதும் தன் தேவைக்கு பயன்படுத்தியதில்லை என்கிறார்கள் மும்பையின் மூத்த செய்தியாளர்கள் ..


கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக , ஜீரோ டயல் என்னும் ஒற்றர்களை பற்றிய தன் சிறப்பு நூலை, டே வெளியிட்டார் .. புலனாய்வு தொடர்பான 3 நூல்களை இதுவரை டே வெளியிட்டுள்ளார். 

அண்மையில் தாவூத் இப்ராகிம் சகோதரரின்   மரணம் குறித்து கூட கட்டுரைகள் வெளியிட்டு இருந்தார் டே . ஆனால் சமீபத்தில், அவர் எந்த சிறப்பு புலனாய்வு கட்டுரையும் எழுதாத நிலையிலும் , அவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது, செய்தியாளர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பி உள்ளது 





.சில மாதங்களுக்கு முன்பாக , ரயில்வே சிறப்பு காவல் படை கலனில் நடைபெற்று வந்த முறைகேடுகளை, அகேலா என்னும் செய்தியாளர் புலனாய்வு செய்து வெளியிட்டதற்காக மாநில அரசால் கைது செய்யப்பட்டிருந்தார்..

ஜோதிர்மாய் டே,  அரசின் இந்த செயலை கண்டித்து செய்தியாளர்கள் அமைப்பினர் பலருடன் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் பாட்டிலை சந்தித்து செய்தியாளர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு தன் கண்டனத்தை 
தெரிவித்துள்ளார் .

மேலும் மாநில மற்றும் மத்திய அரசின், பல மக்கள் விரோத செயல்பாடுகளையும், தன்னுடைய கட்டுரைகளில் கடுமையாக எதிர்த்து வந்தார் டே .. 



அரசுக்கு எதிரான செய்திகளோ , நிழல் உலகம் பற்றிய செய்திகளோ , எவ்வித தயக்கமும் இன்றி மக்களுக்கு உண்மையை தொடர்ந்து எழுதி வந்துள்ளார் டே .. 
கடந்த 6  மாதங்களில் மட்டும் இந்தியாவில் மூன்று செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 
.
பத்திரிகை துறை இது மாதிரியான சவால்களை தொடர்ந்து சந்தித்தே வந்திருக்கிறது ..இது மாதிரியான அச்சுறுத்தல்களால்  புலனாய்வு செய்தியாளர்களின் எண்ணிக்கை எவ்விதத்திலும் குறையாது என்கிறார் தேசிய செய்தியாளர்கள் சங்க தலைவர் நின்னான் ...

டே வின் மரணம் குறித்த உண்மையான தகவல்களை மாநில அரசு வெளியிட வேண்டும் என்றும், தேசிய செய்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது... 

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்காக கொலை செய்யப்பட்ட சதீஷ் செட்டி , நிழல் உலகம் பற்றி செய்தி வெளியிட்ட ஜோதிர்மாய் டே என மும்பை மாநகரம் சமூக மாற்றத்திற்காக போராடும் போரளிகளின் ரத்த பூமியாகி வருகிறது . 




உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர உழைப்பவர்களுக்கு  மரணமே பரிசானாலும் ,அந்த பாதையில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை தான் சமூக மாற்றத்திற்கான உந்துதல் சக்தி ..
மக்கள் செய்தியாளர் "ஜோதிர்மை டே" வுக்கு வீரவணக்கம்!

செய்தியாளர் நெல்சன் சேவியர் .


June 13:
பாபா ராம்தேவின் நாடகம்!   

                                

 "என் வாழ்க்கையில் இதுவரை இப்படியொரு வன்முறையை நான் பார்த்ததேயில்லை" என ராம்லீலா மைதானத்தில் நடந்த சம்பவத்தைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் யோகா குரு பாபா ராம்தேவ். யோகா வகுப்பு நடத்தவும், மாலை 6 மணிக்குள்ளாக அனைவரும் கலைந்துச் சென்று விடுவோமென்றும் காவல் துறையிடம் அனுமதி வாங்கினார் பாபா. ஆனால், ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் என ஊடகங்களுக்குக் கூறினார். இதனால் அங்கு கூடி வந்த கூட்டத்தைப் பார்த்து தனது முடிவை மாற்றி களைந்து போக மருத்துவிட்டார் பாபா. 
 இதனால் வேறுவழி இல்லாமல் மத்திய அரசு காவல் துறையை ஏவி கூட்டத்தைக் கலைத்தது. வெறும் 2000 பழங்குடியினரை கலைப்பதர்க்கெல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்தி பொதுமக்களை கொள்ளும் காவல் துறை ராம்லீலா மைதானத்தில் கையாண்டவிதம் மென்மையானதே. இதற்கே பாபா, 'இப்படியொரு வன்முறையைப் பார்த்ததில்லை' என கூறுகிறார் என்றால் அவர் (பாபா) இத்தனை நாள் மிகவும் பாதுகாப்பான, சொகுசான வாழ்க்கையையே வாழ்ந்து வந்திருக்கிறார் என்று பொருளாகிறது. 
   "ஊழலை ஒழிப்பதற்கு உருவாக்கப்படும் லோக்பால் அமைப்பு பிரதமரையும், இந்திய தலைமை நீதிபதியையும் விசாரிக்கக் கூடாது" என்று கூறியவரே இந்த ராம்தேவ்தான். அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மாற்றாக மத்திய அரசாங்கத்தால் உருவாகப்பட்டவராககூட பாபா ராம்தேவ் இருக்கலாம்!.
 கறுப்புப் பணம் வெளிக்கொண்டுவரப்பட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை, அதேவேளை அதற்காக பாபாவின் போராட்டத்தை ஊக்குவிக்க வேண்டுமா? அவர் கூறும் கோரிக்கைகள்தான் என்ன?
  •  ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டுமென கோருகிறார். கொலை செய்த குற்றவாளிகளுக்கே மரண தண்டனை கொடுக்கக் கூடாதென பலர் கூறிவரும் வேளையில் ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை என்பது இந்தியாவில் நடக்காத காரியம்!.
  • 500, 1000 ஆகிய ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக்கிவிட வேண்டுமெனவும் கூறுகிறார். இந்த நோட்டுகளை ஊழல் பெரிச்சாளிகள் மட்டுமா வைத்துள்ளார்கள்? சாதாரண உழைத்து உண்பவர்கள்கூடதான் வைத்துள்ளார்கள். எனவே இதுவும் வேலைக்கு ஆகாத கோரிக்கை!.
  • ஜனநாயக இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாக்கத்தின் அடையாளங்கள் அளிக்கப்பட வேண்டுமென்கிறார். அதாவது ஆங்கிலத்தில் நடக்கும் நிர்வாகம், கல்வி எல்லாம் நிறுத்தப்பட வேண்டுமாம். ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்வு காணும் எளிமையான பிரச்சனை அல்ல, மக்களிடையே விவாதம் நடத்தப்பட வேண்டிய பெரிய விஷயம் இது. ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு எல்லா இடங்களிலும் இந்தியைக் கொண்டு வரும் முயற்சி என்பதே இதன் பொருள். இது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிவாசிகளுக்கு எதிரானது. எனவே இந்தக் கோரிக்கையும் செல்லுபடியாகாது!.  
  • அடுத்து மிகவும் முக்கிய கோரிக்கையை அவர் வைக்கிறார். அது இந்திய பிரதமர் நேரடியாக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்கிறார். அதாவது நாடாளுமன்ற ஜனநாயகம், பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆகியவை பாபாவுக்கு வேம்பாகக் கசக்கிறது போலும்! அந்தந்த மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ராம்தேவ்கள் போன்றோரின் சில திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பதிலாக அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரும் விருப்பத்தைத் தெரிவிக்கிறார் பாபா! ஆக இந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப் படவேண்டியதுதான்!. 
   இந்தக் கோரிக்கைகளை எல்லாம் பெரிதாக ஊடகங்கள் விவாதிக்காமல், காவல் துரையின் அத்துமீறல்களை மட்டுமே சுட்டிக்காட்டி பரபரப்பை ஊட்டுகின்றன. இவருக்குப் பின்னால் உள்ள ஜனநாயக விரோதமான கோரிக்கைகளை அம்பலப்படுத்தத் தவறுகின்றன. மேலோட்டமாக ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்லப்படும்போது, அதற்கு ஆதரவு அளிப்பது கடமை அன்று தோன்றுகிறது. இதனைத் தவிர்த்துப் பார்க்கும்போது இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்ற எண்ணமே மேலோங்குகிறது!.
   மேலும், பாபா ராதேவ் உண்ணாவிரத நாடகத்தை 9 நாள் கழித்து இன்று முடிதுக்கொண்டிருக்கிறார். கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தேராடவுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மற்றொரு ஆன்மீகவாதியான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டதாகவும் செய்திகளும், படங்களும் ஊடகங்களில் வெளிவந்து இருக்கின்றன.
   பாபா உண்ணாவிரதம் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பி.ஜே.பி. ஆட்களுமே அதிகம் வந்து பாபாவுக்கு ஆதரவளித்தனர். ஆக பாபா ராம்தேவை பின்னாலிருந்து இயக்குவதே ஹிந்துத்துவா சக்திகள்தான் என்று ஒரு சந்தேக எண்ணம் தோன்றுகிறது.
   எது எப்படியோ, பாபாக்களும், ஹசாரேக்களும் ஊடகங்களை பயன்படுத்தி தங்களுக்குப் புகழ் சேர்த்துக்கொண்டு, மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பதே நிஜம்!.
                                                                                                                             

- உமர் முக்தார்,                         
                                                                                 செய்தியாளர், வின் தொலைகாட்சி

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive